தொளிலாளர்கள் தினமான இன்று லண்டனில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்றனர்.
மத்திய லண்டன் பகுதியில் பிரித்தானியா வாழ் பல்லின மக்களும் பங்கேற்ற இந்த மேதின நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டதமிழர்கள் பங்குகொண்டிருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களோடு "கிளெர்கென்வெல் கிறீன்" பகுதியில் இருந்து மதியம் 1 மணியளவில் ஆரம்பமாகிய இந்த மேதின ஊர்வலம் பிற்பகல் 3 மணியளவில் "ரவல்க்கர் ஸ்குயார்" பகுதியை சென்றடைந்தது.
சர்வதேச மட்டத்தில் சிறீலங்கா மீதான கண்டனங்கள் வலுவடைந்துவரும் நிலையில் அண்மையில் சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.
சனல்4, அல் ஜசீரா, ரைம்ஸ் போன்ற ஊடகங்களினூடாக தொடர்ச்சியாக சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருந்தமையும், ஐ.நா அவற்றை ஆதாரமாக வைத்து விடுத்த அறிக்கையும், பூலோக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகஅதற்கு ஆதரவு தெரிவித்துவரும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் செயற்பாடும் புலம்பெயர் தமிழர்களுக்கு புதுத் தென்பை ஊட்டியிருக்கிறது.
அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இவ்வருட மேதின ஊர்வலத்தை தமிழர்களுக்கான களமாக பிரித்தானியத் தமிழர்கள் மாற்றி சிறீலங்காவின்போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தும் பேரணியாக்கியிருந்தனர்.
இப்பேரணியில் "போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சனல்4, அல்ஜசீரா, ரைம்ஸ் ஊடகங்களுக்கு நன்றி" "போர்க்குற்றவாளிகளை கைது செய்" "ஈழத்தமிழர்களுக்கு நீதி வழ்ங்கு" "தமிழர்கள் மீதான இன அழிப்பை நிறுத்து" "தமிழ் மக்கள் சுதந்திரத்தை நேசிக்கும் மக்கள்" "ஐ.நாவே சிறீலங்காவின் போர்க்குற்றங்களை தாமதமின்றி விசாரணை செய்" போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகள், பனர்கள் என்பவற்றை தாங்கியவாறுபேரணியில் பெருந்திரளான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்கா அரசின் போர்க்குற்றவாளிகளை நிறுத்த உதவுமாறும், சிறீலங்காவில் நடைபெற்ற இன அழிப்புதொடர்பாக விசாரணைசெய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரும் மனுவிற்கு ஆதரவு தெரிவித்து பல்லின மக்களிடமும் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தமையை காணமுடிந்தது.
பிரித்தானியத் தமிழர்களின் இந்த முயற்சி வேற்றின மக்களை கவர்ந்தது மட்டுமன்றி பல ஊடகங்களும் தமது புகைப்பட மற்றும் ஒளிப்படக்கருவிகளுக்குள் உள்வாங்கிச்சென்றதை காணமுடிந்தது. |
0 கருத்துரைகள்:
Post a Comment